×

இரவு 11 மணி வரை உணவு விடுதிகளை திறக்க கோரிக்கை

 

ஊட்டி, மே 4: கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில் ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் கேரளாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல் தமிழகத்தின் பிறப் பகுதிகளில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு உணவிற்காக இரவு நேரங்களில் நகருக்குள் வருகின்றனர்.

சிலர் பகல் முழுவதும் பயணித்து விட்டு இரவு நேரங்களிலேயே ஊட்டியை வந்தடைகின்றனர். பெரும்பாலானவர்கள், இரவு 10 மணிக்கு மேல் தான் நகருக்குள் வருகின்றனர். மேலும், வார விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுவாக ஊட்டியில் இரவு 10 மணிக்கெல்லாம் கடைகளை மூடப்படுகிறது. கடைகளை அடைக்க காவல்துறையும் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.

இதனால், இரவு 10 மணிக்கு மேல் வரும் சுற்றுலா பயணிகள் உணவிற்காக அலைய வேண்டியுள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் நலன் கருதி, மே மாதம் முடியும் வரை இரவு 11 மணி வரை கடைகள் திறக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, உணவு விடுதிகள், டீ கடைகள் மற்றும் பெட்டிக் கடைகள் போன்றவைகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post இரவு 11 மணி வரை உணவு விடுதிகளை திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ooty ,Karnataka ,Kerala ,Tamil Nadu ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...